ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்குமா: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு ...
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தியது. அமலாக்கப் பிரிவு காவல் முடிந்த நிலையில் நவம்பர் 13-ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்கச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றக் காவல் நேற்று முடிந்தநிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கான நீதிமன்றக் காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி குஹெர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பல முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு 4 மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவரின் உடல்எடையும் 8 கிலோ வரை குறைந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
சிதம்பரம் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை மீது அமலாக்கப்பிரிவு தரப்பு வாதங்களும், சிதம்பரம் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் சிதம்பரம் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் நாளை தீர்ப்பு வழங்க உள்ளார்.