போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரிலிருந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை நோக்கி சில நண்பர்களுடன் நடைபயணமாக வந்த 21 வயது நிரம்பிய மாணவர் லோகேஷ் பாலசுப்ரமணியன் செகந்தராபாத் நகரத்திற்கு வந்தபோது மயங்கி கீழே விழுந்திருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறப்பட்டு, அவரது சடலம் பள்ளிபாளையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. எந்த தவறையும் செய்யாத லோகேஷ் பாலசுப்ரமணியன் இறப்புக்கு யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா?
பிரதமர் மோடி அவர்களே, போதும் இழப்பு. இனியாவது கொரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள். மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற முன் வாருங்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் ஜனநாயக உணர்வோடு கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டு வருவதால் பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். சீனாவில் கொரோனாவினால் ஏற்படுகிற உயிரிழப்புகள் குறித்து அவருக்கு அப்போது எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஜனவரி 30-ம் தேதியே கேரளாவில் முதல் கொரோனா தொற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் பாதிப்புகள் காரணமாக மார்ச் 19-ந்தேதிதான் விமான நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை மோடி வெளியிட்டார்.
கடந்த மார்ச் 24-ந்தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்தார். 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஊரடங்கை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்ததின் விளைவைத்தான் இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மாநில முதல்வர்களுடன் கலந்து பேசாமல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணி நேரத்தில் நடைமுறைக்கு வந்தது. இதனால் லட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சொந்த ஊருக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.


இத்தகைய கொடூர சம்பவங்கள் நடப்பதற்கு பிரதமர் மோடியின் ஆட்சிதான் காரணம் என்று குற்றம்சாட்ட விரும்புகிறேன். இந்த உயிரிழப்பு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக குறிப்பிட விரும்புகிறேன். எனவே, பிரதமர் மோடி அவர்களே, போதும் இழப்பு. இனியாவது கொரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள். மலிவான விளம்பர அரசியலை தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்ற முன் வாருங்கள்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
