தமிழகத்தில் கோவை, நாகை, விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்தே அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 9ம் தேதி 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் கோவை, நாகை, விழுப்புரம், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நாகை ஆட்சியர் பிரவீன் நாயரும், கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும், அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டாளரான ஆர்.சுதன் சமச்சீர் கல்வி திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் திட்ட இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்க பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் லட்சுமி ப்ரியா தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேரூராட்சி ஆணையராக செல்வராஜும், ஆசிரியர் தேர்வு வாரிய ஆணையராக லதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.