அடுத்த வருஷம் நாடாளுமன்றத்துடன் தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்தல்….. எதுக்கு தெரியுமா ?
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. இதையடுத்து நாடாளுமன்றத்துடன் தமிழக சட்டப் பேரவைக்கும் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சட்ட கமிஷன் சிபாரிசு செய்து வரைவு அறிக்கை தயார் செய்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் நாட்டுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதேபோன்று தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவதால் வழக்கமான பணிகள் பாதிக்கின்றன.இதன் காரணமாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலுடன் சேர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், அரியானா, மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 19 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என சிபாரிசு செய்து மத்திய சட்ட கமிஷன் வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.
எஞ்சிய கர்நாடகம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, கோவா, குஜராத், இமாசல பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 12 மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
2024-ம் ஆண்டு தேர்தல் நடத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிற மாநிலங்களில் சிலவற்றின் ஆயுள்காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை வரலாம். எனவே இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும்.
இது சாத்தியம் இல்லை என்கிற பட்சத்தில், 19 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்த 30 மாதங்களுக்கு பிறகு இந்த 12 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக வரும் 17-ந் தேதி சட்ட கமிஷன் விவாதிக்க உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் மைனாரிட்டி அரசு இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழும் என்றும், அப்போது சட்டமன்றத்துக்கு தேர்தல் வரும என்றும் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் ஆரூடம் சொல்லிவரும் நிலையில் சட்ட கமிஷன் சிபாரிசும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.