மாநில உரிமைக்காக இப்படிதான் போராட வேண்டும் - சபாஷ் சொன்ன ராமதாஸ்...!
மத்திய அரசுக்கு எதிராக தனி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவெடுத்திருப்பது துணிச்சலான முடிவு எனவும் மாநில உரிமைகளுக்காக இப்படித்தான் போராட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய சக்தியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படியான சூழலில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதால், மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இதனிடையே பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியதற்காக சந்திரபாபு நாயுடுவிற்கு மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். நாட்டை பேரழிவில் இருந்து காக்க தேவையான நடவடிக்கை இது என மம்தா பானர்ஜி டுவீட் செய்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டுவீட் செய்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு எதிராக தனி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவெடுத்திருப்பது துணிச்சலான முடிவு எனவும் மாநில உரிமைகளுக்காக இப்படித்தான் போராட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.