ஆளுநர் உரையின்போது இதற்காகத்தான் வெளிநடப்பு செய்தோம்.. பிரச்சார மேடையில் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்..
மேலும் தாங்கள் சட்டசபையில் ஆளுநர் உரையின்போது வெளிநடப்பு செய்ததற்கான காரணம் இந்த அரசின் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி ஜெயக்குமார் உதயகுமார் விஜயபாஸ்கர் போன்றவர்கள் மீது ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் என்றார்.
தேர்தலில் வெற்றிபெற்ற 100 நாட்களில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகாணப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது, இந்நிலையில் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அவர், மக்களாகிய உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதே என் முதல் பணி என்றார், மக்களிடமிருந்து குறைகளை நேரடியாகவும், மனுக்களாகவும் பெற்று வருவதாக கூறிய அவர், தான் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் முதல் 100 நாட்களில் போர்கால அடிப்படையில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்படும் என உறுதியளித்தார்.
மேலும் தாங்கள் சட்டசபையில் ஆளுநர் உரையின்போது வெளிநடப்பு செய்ததற்கான காரணம் இந்த அரசின் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி ஜெயக்குமார் உதயகுமார் விஜயபாஸ்கர் போன்றவர்கள் மீது ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் என்றார். கொரோனா காலங்களில் பிளிச்சிங் பவுடர். விளக்குமாறு (துடைப்பம்) வாங்குவதில் கூட ஊழல் செய்த அரசு எடப்பாடி அரசு என்று கூறினார்.
அதிமுக அரசை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றுவதே திமுகவின் வேலை என்ற அவர். பழனிச்சாமியின் அதிமுக அரசு விவசாய சட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டு விவசாயிகளுக்கு எதிரான அரசாகவுள்ளது என்றார்.விழாவில் திருவாடானை தாலுகாவை சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி சந்தியாகு என்பவர் ஸ்டாலினை தொட்டு பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டதால் அவரை அருகில் அழைத்து தொட்டுப் பேசினார் ஸ்டாலின்.