இதுதான் தில்லுன்றது.. சட்டமன்றத்தில் கெத்து காட்டிய ஸ்டாலின்.. துணிச்சலை பாராட்டிய மஜக அன்சாரி.
ஒன்றிய அரசின் CAA குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து அதை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். அவரது துணிச்சலான இந்த முடிவை பாராட்டி மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.
CAA வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ஒன்றிய அரசின் CAA குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து அதை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். அவரது துணிச்சலான இந்த முடிவை பாராட்டி மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.
கடந்த தேர்தலுக்கு முன்பாக நாங்கள் அறிவாலயத்தில் தளபதி அவர்களை சந்தித்தப் போது, நாங்கள் கையளித்த ஐந்து அம்ச கோரிக்கைகளில் இது முதன்மையானது. அந்த வகையில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய CAA வுக்கு எதிரான தீர்மானத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எடுத்துரைத்துள்ள கருத்துகள் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரைகளாகும்.ஈழத் தமிழர்களையும், அண்டை நாட்டு முஸ்லிம்களையும், நேபாள கிரித்தவர்களையும் புறக்கணித்து, மத பாகுபாடு மூலம் இந்தியாவின் பாராம் பர்ய கண்ணியத்தை சீர்குலைக்கும் இச்சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளை எதிரொலிப்பதாக இருக்கிறது.
இத்தீர்மானம் என்பது இச்சட்டத்திற்கு எதிராக இரவு, பகலாக போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.இதற்காக போராடிய அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை போராளிகள் அனைவரும் அகமகிழ்ந்துள்ளனர்.எனவே எமது மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் மீண்டும் ஒரு முறை மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகம் காக்கும் அறப்போரில் தமிழ்நாடு எப்போதும் முதல் வரிசையில் முன்னிற்கும் என்பது நிருபிக்கப்பட்டிருக்கிறது.