This is the reason for admk support central government - Duraimurugan ...
வேலூர்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு உதவி செய்வதால் அதிமுக அரசு, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் சாலையில் நேற்று திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்து துரைமுருகன் பேசியது:
"பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் மாணவர்கள், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு தவறிவிட்டது.
அரசு அறிவித்த கட்டணக் குறைப்பு ஏமாற்றம் அளிப்பதாகவுள்ளது. ரூபாய் அளவில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 5 பைசா, 10 பைசா என்ற அளவில் குறைத்திருப்பதை ஏற்க முடியாது. இந்த அரசு விரைவில் அகற்றப்படும்.
திமுக ஆட்சியின்போது கடும் நிதிநெருக்கடிக்கு மத்தியிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
அதிமுகவின் நிர்வாகத் திறமையின்மையால் போக்குவரத்துத் துறையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாத வகையில் அதிமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு உதவி செய்து வருகிறது. இதனால், அதிமுக அரசு தமிழக நலனை கவனத்தில் கொள்ளாமல் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவும், கச்சத்தீவை மீட்கவும், சேலம் உருக்கு ஆலையை எஃகு ஆலையாக மாற்றவும் அறிவிப்பு வெளியிட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
