அரசியல்வாதியைப் போல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாகவும் அவர் மிகவும் ஆபத்தானவர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

அரசியல்வாதியைப் போல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதாகவும் அவர் மிகவும் ஆபத்தானவர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு நிகழ்சசிகளில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார். அங்கு நிகழ்ச்சிகளுக்கு முன்பு நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை விவகாரத்தில் இந்தியா உதவி செய்கிறோம் என்ற பெயரில் இன்னொரு நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பார்க்கிறார்கள். இதனை சிங்கள மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிற நாடுகளின் உதவியுடன் ஆயுத படைகளை கொண்டு தமிழ் தேசிய போராட்டத்தை நசுக்கியவர் ராஜபக்சே. இந்தியாவில் இது போன்ற நிலை வந்து மக்கள் விரட்டியடிப்பதற்கு முன் பாஜக தங்கள் போக்கை மாற்றி கொள்ள வேண்டும்.

ஆளுநர் மிகவும் ஆபத்தானவர் பேசக்கூடாத்தை பேசுகிறார். அரசியல் பேசுகிறார், அரசியல்வாதியைப் போல் பேசுகிறார். அதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மிகவும் ஆபத்தானவர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சிறுபான்மை மக்களை முன்னிறுத்தும் இயக்கம், மக்களுக்கு எதிராக இல்லை. ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்., தலைவரை போல் பேசியுள்ளார். ஆளுநர் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. பின்னர் இளையராஜா மீதான சர்ச்சை பேச்சு தொடர்பாக கீ.வீரமணி மீது தேசிய எஸ்.சி, எஸ்.டி. ஆணையம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது பா.ஜ.க. செய்யும் அரசியல் சித்து விளையாட்டு. தமிழக அரசியலில் இன்னும் பல அரசியல் சார்பற்றவர்களை சர்ச்சைக்குள்ளாக்குவது தான் அவர்களது திட்டம்.

அம்பேத்கர் குறித்து இளையராஜா எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. சங்பரிவார், இளையராஜாவை துருப்புச்சீட்டாக பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்களைப் போலவும் மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நாட்டில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இயங்குகிறது. மேலும், பல நாடுகளுக்கு தீவிரவாதத்துக்கு ஆள்களை அனுப்புவதாகவும் தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என்.ரவிவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழும் நிலையில் தற்போது திருமாவளவனும் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.