திருமாவளவனுக்கு சின்னம் ஒதுக்கீடு !! தேர்தல் ஆணையம் அதிரடி !!
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறது.
இதில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக பொதுச் செயலாளர் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த தேர்தலில் திருமாவளவனுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. மீண்டும் அதே சின்னத்தை கேட்டு திருமாவளவன் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்திருந்தார்.
இந்நிலையில், திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், சிதம்பரம் தொகுதியில் அவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.