ரஜினி, கமலைவிட முக்கிய பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன….செய்தியாளர்களிடம் ஆவேசமான அன்புமணி ராமதாஸ்…
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் குறித்து பேசுவது தேவையற்றது என்றும் அதைவிட பெரிய பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன என்றும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்தார்.
தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பிலிகுண்டுலுவில் இருந்து பூம்புகார் வரை பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறார்.
நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் அந்த பேரணி தஞ்சையை வந்தடைந்தது.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாசிடம், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த அன்புமணி ராமதாஸ், சோற்றுக்கும் குடிக்கவும் தண்ணீர் இல்லாத சூழலில் நடிகர்கள் ரஜினி, கமல் குறித்த அரசியல் கேள்வி பேசுவதா என்று ஆவேசமாக பதில் கேள்வி எழுப்பினார்.
ரஜினி, கமல் தவிர பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன என்றும் அவை குறித்து கேள்வி கேளுங்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.