பி.எம். கேர்ஸ் இணையதளத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை.. மத்திய அரசை சீண்டும் தமிழக நிதியமைச்சர்..!
ஒன்றிய அரசு வைத்திருக்கும் பி.எம். கேர்ஸ் இணையதளத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜனநாயக நாட்டில் ஓர் அரசாங்கத்துக்கு முக்கிய கடமையே வெளிப்படைத்தன்மைதான். முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையைப் பற்றியும் அதைப் பயன்படுத்தும் நோக்கம் பற்றியும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் செயல்பட்டு வந்த இணையதளம் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது.
மே 7-க்குப் பின் வந்த நிவாரண தொகை அனைத்தையும் கொரோனா என்ற தனிப்பிரிவில் வைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதுவரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.472 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 648 ரூபாய் வந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மேல் உள்ள நம்பிக்கையாலும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாலும் கடந்த இரு மாதங்களில் இந்த நிவாரணத் தொகை வந்துள்ளது.
ஒன்றிய அரசு வைத்திருக்கும் பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை. அதிமுக ஆட்சியில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.400 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு தமிழ்நாட்டு நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இந்த ஆண்டு இ- பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் உள்ளது. அரசின் அனைத்து பணிகளும் 100 சதவீதம் இணையதளம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.