வழக்கின் விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியைத் தொடரலாம் என்று அனுமதி வழங்கினர். 

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை நீட்டிக்கத் தேவை இல்லை என்று தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 3 மாத அனுமதி நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. வேதாந்தா நிறுவனம் சார்பில் நேற்று (ஜூலை 29) புதிய இடைக்கால மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ ஆக்சிசன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க தேவையில்லை'' எனக் கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியைத் தொடரலாம் என்று அனுமதி வழங்கினர்.