தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடைபெறும்:எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியம்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என பேரவை தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என பேரவை தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் இந்த முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்க பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று கூடியது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.
அலுவல் ஆய்வுக்குழு முடிந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடத்தப்படும் எனவும் முதல் நாளில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினம் அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். இரண்டாவது நாள் அரசினர் அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மூன்றாவது நாள் துணை நிலை அறிக்கை தாக்கல், சட்டமுன்வடிகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றுதல் ஏனைய பணிகள் நடைபெறும் எனவும அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், கொரனா பரவலை தடுக்கும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கொரனா பரிசோதனை கட்டாயம் என தெரிவித்தார். பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு கொரனா பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.