மீனவரின் மகன் மீன் பிடிக்கத்தான் போகணுமா? பரம்பரை தொழிலா? - மத்திய அரசை விளாசிய சசிதரூர் எம்.பி.
இந்திய மீனவர்கள நிலை பரிதாபமாக இருக்கிறது, மீனவரின் மகன் மீன்படிக்கத்தான் போகணுமா? என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மத்திய அரசை கடுமையாகப் பேசினார்.
கேரள காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் மக்களவையில் பேசுகையில், “ இலங்கை கடற் படையினரால், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது, பாகிஸ்தான் கடற் படையினரால் குஜராத் மீனவர்கள், கேரள மீனவர்கள் கைது செய்யப்படுவது போன்ற செய்திகளை கடந்த 10 நாட்களாக கேட்டு வருகிறோம்.
நமது நாட்டில் மீனவர்கல் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கையற்ற சூழலிலும், போதுமான பண வசதியும் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள்.
மீன்பிடி சீசன் காலத்திலும் கூட மீனவர்களுக்கு இந்த நிலைதான் நிலவுகிறது. இந்திய கடற்பகுதியில் மீன்வளம் குறைந்ததால், மீனவர்கள் கடலுக்குள் அதிக தூரம் செல்கிறார்கள். ஆனால், அண்டைநாடுகளோ தங்கள் கடற்பகுதிகளுக்கு வருகிறார்கள் எனக் கூறி அவர்களை கைது செய்கிறார்கள்.
இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து அரசு தலையிட வேண்டியது அவசியம். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் நம்மிடம் இல்லை. வேளாண் அமைச்சகமும் முன்னுரிமை கொடுப்பதில்லை. மீனவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லை.
மீனவர்கள் குடும்பத்தில் இன்னும் பரம்பரை முறையே தொடர்ந்து வருகிறது.தந்தை மீனவராக இருந்தால், மகனும் மீனவராக இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதை விட்டு அவர்களால் போக முடியவில்லை.
மீனவர்கள் சமூகத்துக்காக சிறப்பான திறன்மேம்பாட்டு பயிற்சிகள் கண்டிப்பாக வேண்டும். இது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த பிரச்சினையை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, நாடுமுழுவதும் இருக்கும் மீனவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பான நிதி கட்டமைப்பு உருவாக்க வேண்டும்'' என்றார்.