கொரொனா நுண்கிருமித் தொற்று மீண்டும் தீவிரமடைந்திருப்பதாக அறியப்படும் இந்த நேரத்தில் வேறு எவற்றை விடவும் உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியமானது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்; உங்கள் அனைவரின் பேராதரவும், களத்தில் நீங்கள் செலுத்திய கடின உழைப்பும் கொண்டு நாம் தமிழர் கட்சி இத்தேர்தலைச் சந்தித்திருக்கிறது. நம் அனைவரின் ஒற்றுமைக்கும், உழைப்புக்கும், உறுதிப்பாட்டுக்கும் உரிய வெற்றியினைக் காலம் நமக்குக் கட்டாயமாகக் கையளிக்கும். முன்னெப்பொழுதையும் விட மக்களின் ஆதரவு நமக்கு அதிகம் கிடைத்திருக்கும் இந்த வேளையில் இனி வரும் நாட்கள் நமக்கு மிக முக்கியக் காலகட்டம் என்பதை உணர்ந்து உறவுகள் களத்திலும் சமூக வலைதளங்களிலும் மிகக்கவனமாகப் பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறேன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும், கொரோனா நுண்கிருமித் தொற்று மீண்டும் தீவிரமடைந்திருப்பதாக அறியப்படும் இந்த நேரத்தில் வேறு எவற்றை விடவும் உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியமானது. அதனால் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம், கையுறை, தொற்றுத் தடைத்திரவம் (sanitizer) ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு, மக்கள் திரளாகக் கூடுவதைத் தவிர்த்து தனி நபர் இடைவெளியை கடைபிடிக்குமாறும்,நோய் எதிர்ப்பு ஆற்றலுக்காக கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இது கடும் வெயிற்காலமாக இருப்பதால் அனைவரும் மிகக் கவனமாகவும், வீட்டிலுள்ள முதியோர்களை அதீத கவனம் கொண்டு பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் அதே நேரத்தில் பிற உயிரினங்களைக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும், ஆதலால் உறவுகள் அனைவரும் தங்கள் வீடுகளின் முகப்பில் அல்லது மாடியில் பறவைகளுக்கும், பிற சிற்றுயிர்களுக்கும் தண்ணீர்த் தொட்டி ஒன்றை அமைத்து உயிர்நேயம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.