நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்புக்கு 5ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.  

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்புக்கு 5ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மாநகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காகவும், அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை களத்தில் நின்று நடத்தி வந்தது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஆனால் அந்த அமைப்பை குறிவைத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர், சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.அதன் அலுவலகங்களிலிருந்து பலா முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு சர்வதேச அளவில் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டியதாகவும், தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை குற்றம்சாட்டியது. இதற்கான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய புலனாய்வு முகமை வழங்கியது. தென்இந்தியாவைப் பொறுத்தவரையில், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கூட்டு இயக்கங்களை சேர்ந்த 11 பேர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 8 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மேல் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்தான் பயங்கரவாதி அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குறிப்பிட்டு பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பிலும் அந்த அமைப்புக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டுவந்த அந்த அமைப்பின் அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த கட்டிடத்தில் உரிமையாளர்கள் அனிபா மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் நேரில் வரவழைத்து கட்டிடத்தில் உள்ள எந்தப் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டி கையொப்பம் பெற்றனர்.

பின்னர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை முன்னிலையில் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் பாப்புலர் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலக பெயர் பலகையை நீக்கினார், பின்னர் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.