அதிமுக, திமுகவை நம்ப தூத்துக்குடி மக்கள் தயாராக இல்லை.. ஆட்சியாளர்களுக்கு டிடிவி தினகரன் வைத்த டிமாண்ட்.
அவர்களின் இந்த உணர்வினை புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழ்நிலையில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி, உயர் நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழ்நிலையில் அந்த பணிகளை உயர் நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல், இங்குள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய அரசும் எதிர்க்கட்சியான திமுகவும் கடந்த காலங்களில் இரட்டைவேடம் போட்டதால், இப்போதும் அவர்களையும் நம்புவதற்கு தூத்துக்குடி மக்கள் தயாராக இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளை தந்திரமாக வேதாந்தா நிறுவன உரிமையாளர்கள் செய்து விடுவார்களோ என்ற பயம் தூத்துக்குடி மக்களிடம் இருக்கிறது.
அவர்களின் இந்த உணர்வினை புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி, சென்னை உயர் நீதிமன்றமும் கண்காணித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில் தற்போது உள்ள சூழலில் ஆக்சிஜன் பற்றாக் குறையை சமாளிப்பதற்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பு முடிவை நிறுத்திட வேண்டும். தமிழகத்தின் தேவையே இன்னும் பூர்த்தியாகாத நிலையில் இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் வாய்ப்புள்ள மற்ற ஆலைகளிலிருந்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி அரசு மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி தடுப்பூசி விலையை கட்டுக்குள் வைத்திருப்பது, அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இலவசமாக தடுப்பூசிகளை போடுவது, ஆகியவற்றையும் மத்திய மாநில அரசுகள் முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.