ஏழுமலையான் புண்ணியத்தில் தமிழக மக்கள் நலமுடன் இருக்கிறார்கள்! அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்!
தமிழகத்தில், டெங்கு பாதிப்பில்லை என்றும், திருப்பதி ஏழுமலையான் அருளால் தமிழக மக்கள் எந்த குறையும் இல்லாமல் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறினார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வெகு வேகமாக பரவி வருகிறது. டெங்கு பாதிப்பு காரணமாக ஒவ்வொரு நாளிலும் 10-லிருந்து 15 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், தனது குடும்பத்தாருடன், திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.
இதன் பின்னர் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு பாதிப்பில்லை என்று கூறினார். திருப்பதி ஏழுமலையான் அருளால், தமிழக மக்கள் எந்த குறையும் இல்லாமல் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறினார்.