ஆயிரமாக உயரப்போகிறது மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை.. பாஜக திட்டம் பற்றி கதறும் காங்கிரஸ்..!
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எம்.பி.க்கள் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க மத்தியில் அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தகவலை கசியவிட்டுள்ளார்.
மத்திய அரசு தற்போது புதிய நாடாளுமன்றத்தைக் கட்டி வருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அமரும் வசதியுடன் மக்களவை உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில், ‘நாடாளுமன்ற பாஜக நண்பர்கள் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மக்களவைத் தொகுதிகள் ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது.
இதையெல்லாம் எதற்காக செய்கிறார்கள் என எதுவும் தெரியவில்லை. ஆனால், மாநில சட்டப்பேரவைகளைக் கலைப்பது உள்பட அரசியல் சட்டம் வழங்கியுள்ள எல்லா அதிகாரங்களையும் செயல்படுத்த மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை தேவை. மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரித்தால் அதற்கு பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு தர வேண்டும். அதனால்தான் புதிதாக கட்டிவரும் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆயிரம் எம்.பி.க்கள் அமரும் வகையில் மக்களவை வடிவமைக்கப்பட்டு வருகிறது. எதுவாக இருந்தாலும், மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தே அதை அமல்படுத்த வேண்டும்” என்று மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.