ஓய்ந்தது மழை.. தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது.. இனி வறண்ட வானிலை நிலவும் என அறிவிப்பு.
வடகிழக்கு பருவமழையானது தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா ஆந்திரா தெற்கு, உள் கர்நாடகா பகுதிகளில் இருந்து இன்று விலகியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையானது தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா ஆந்திரா தெற்கு, உள் கர்நாடகா பகுதிகளில் இருந்து இன்று விலகியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பதிவானது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜனவரி மாதம் பெய்த கனமழையின் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20-1-2021 மற்றும் 21-1-2021 தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.