லிப்டில் சிக்கித் தவித்த அமைச்சர்...! கதவை உடைத்து மீட்கப்பட்டார்...!
அமைச்சர் ஓ.எஸ். மணியன், அரசு மருத்துவமனையில் லிப்டில் சிக்கினார். பின்னர், லிப்டின் கதவு உடைக்கப்பட்ட பிறகே அவர் மீட்கப்பட்டார்.
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மீனவர்கள் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் காயமடைந்தவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களைப் பார்ப்பதற்காக, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மக்களவை உறுப்பினர் கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்களை மருத்துவ கல்லூரி டீன், இரண்டாவது மாடிக்கு லிப்டில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது.
லிப்டை இயக்க ஊழியர்கள் முயன்றனர். ஆனாலும், லிப்ட் இயங்கவில்லை. இதன் பிறகு, லிப்ட் கதவுகளை உடைத்து, அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்திதது ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.