போயஸ் கார்டனிலும் உள்ளே புகுந்தது வருமான வரித்துறை - மீண்டும் பரபரப்பில் தத்தளிக்கும் தமிழகம்...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த போயஸ்கார்டன் இல்லத்திலும் வருமான வரித்துறை தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
போயஸ் கார்டனில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்று 3 வருமான வரித்துறை ஆணையர்கள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனம் என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை 6 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதில் சற்று நேரத்திற்கு முன்பு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன இரண்டாவது முறையாக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திலும் உதவியாளர் பூங்குன்றன் அறையிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.