Jayakumar: கலவரம் வரவேண்டும் என்பதற்காகவே திமுக இப்படி செய்தது.. இதற்கு போலீசும் உடந்தை.. ஜெயக்குமார் பகீர்.!
பதிலுக்கு நாங்களும் சட்டத்தை கையில் எடுத்தால் நிலைமை மோசமாகி இருக்கும். சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்து விட்டோம். துக்க நிகழ்ச்சியில் அமமுகவினர் கார்களை வழிமறித்து கூச்சலிடுவது வருந்ததக்கது. அதிமுக - அமமுக இடையே மோதலை உருவாக்கி திமுக குளிர் காய நினைத்தது.
துக்க நிகழ்ச்சியில் அமமுகவினர் கார்களை வழிமறித்து கூச்சலிடுவது வருந்ததக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக சார்பில் விசாயர்பாடியில் அன்னதானம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்கனவே முறையாக அனுமதி பெற்றுதான் நாங்கள் அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம்.
நாங்கள் வெளியே வருவதற்குள்ளாகவே அமமுக தொண்டர்களை காவல் துறையினர் அனுமதித்து விட்டார்கள். கலவரம் வரவேண்டும் என்பதற்காகவே திமுக இப்படி செய்கிறது. இதற்கு காவல் துறையினர் துணை போய் இருப்பது வேதனையாக உள்ளது. பதிலுக்கு நாங்களும் சட்டத்தை கையில் எடுத்தால் நிலைமை மோசமாகி இருக்கும். சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்து விட்டோம். துக்க நிகழ்ச்சியில் அமமுகவினர் கார்களை வழிமறித்து கூச்சலிடுவது வருந்ததக்கது. அதிமுக - அமமுக இடையே மோதலை உருவாக்கி திமுக குளிர் காய நினைத்தது.
ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர் படையுடன் சசிகலா வரவில்லை. குண்டர்கள் படையுடன் வந்தார். அமமுக என்ற கட்சி அம்மா கட்டிக்காத்த அதிமுகவுக்கு எதிரான கட்சி, தற்போது அமமுக தொண்டர்களையும் சசிகலாவையும் பிரிக்க முடியாது. இனியும் அவர்கள் அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என கூறினால் அதைக்கண்டு தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்.
கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வேண்டுமென்றே தலைமைக் கழகத்திற்கு வந்து சலசலப்பை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு தலைமைக் கழகத்திற்கு வந்தார்கள். தகுதி உள்ளவர்களை நாங்கள் மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளித்தோம். தகுதி இல்லாதவர்கள், தொண்டர்கள் என்ற போர்வையில் வெளியே நின்று தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்காக சசிகலா அறிக்கை விடுவது கொம்பு சீவிவிட்டு அதற்காக முதலைக் கண்ணீர் விடுவதற்கு சமம் என ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.