அலட்சியம்.. அஜாக்கிரதை வேண்டாம்.. வரும் காலங்கள் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர்..!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளை செய்ய இயலவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளை செய்ய இயலவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.தடுப்பூசியால் எந்தவிதமான பக்க விளைகளும் இல்லை என்பதை பலமுறை விளக்கி கூறியுள்ளோம் என்றார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளை செய்ய இயலவில்லை. ஆய்வு பணி மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூறியதுடன், தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து தமிழகத்தில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
மேலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுநெறிமுறைகளில் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் இருந்தால் வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.