ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் தமிழக அரசு...! சட்டப் பல்கலை. துணை வேந்தரை முதலமைச்சரே நியமிக்க அதிகாரம்
மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுனரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது சட்டப்பல்கலை கழகத்திலும் துணை வேந்தரை நியமிக்க தமிழக முதல்வருக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம்
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரே துணைவேந்தர்களை தேர்வு செய்து நியமித்ததால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தநிலையில் தமிழக சட்டபேரவையில் ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்களை சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாவிற்கு அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மீண்டும் சட்ட பேரவையில் சட்டபல்கலை கழக துணை வேந்தரை நியமிக்கும் வகையிலான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பல்கலை கழக துணைவேந்தர் மசோதா தாக்கல்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம் அளிப்பதற்கான திருதத் சட்டமசோதவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் அறிமுகம் செய்துள்ளார். குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணை வேந்தரை அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினாலோ, பல்கலைக்கழகத்தின் நலனுக்கு ஊறுவிளைப்பதாக அரசு கருதினால் மூன்று உறுப்பினர்களை நியமித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மசோதா நிறைவேற்றம்
இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படுள்ளதால், முதலமைச்சர் தான் அரசு என்பதால் முதலமைச்சர் துணை வேந்தரை நியமனம் செய்வார். இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும்.