The case was filed against minister Saroja who allegedly asked for a bribe
லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்ட அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, லஞ்சம் கேட்டார் என்று அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ஜனவரி 4ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராஜமீனாட்சி என்பவர்தான், அமைச்சர் சரோஜா மீது புகார் ஒன்றைக் கூறினார். தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜமீனாட்சி, தனது பணி நிரந்தரம் மற்றும் பணியிட மாற்றத்தைக் கோரி அமைச்சர் சரோஜாவை அணுகிய போது, அதற்காக ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டினார் என்று கூறினார். தனது புகாரையும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.
இப்படி புகார் அளித்த பின்னர், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப் படவில்லை. பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ராஜமீனாட்சி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு ஏற்கக் கோரி ராஜமீனாட்சி முறையீடு செய்தார். அவரது முறையீட்டின் பேரில் ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
