The AIADMK headquarters headed by Chief Minister Edappadi Palanissamy held a consultative meeting
அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 4ம் தேதி, டிடிவி.தினகரன் அதிமுக புதிய நிர்வாகிகளை நியமித்து பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்கள், டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக இன்று ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுடன் பேசப்பட்டது. இறுதியாக டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து டிடிவி.தினகரனுக்கு அதிமுகவில் தொடர்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்நியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இரு அணிகளும் இணைவதானால், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை வெளியேற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்தனர். அதன்படி தற்போது, டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இரு அணிகளும் இணையும் என பரபரப்பாக பேசப்படுகிறது.
