Thamimun Ansari Condemned

அதிமுகவில் தலைவர்களே உருவாக கூடாது என்பதற்காக வருமான வரி சோதனை நடக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டி உள்ளார்.

சசிகலா, தினகரன் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை 4-வது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையின் சோதனை குறித்து தினகரன் தரப்பு ஆதரவாளர்கள், எதிர்கட்சி தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவின் கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, சோதனை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மனித நேய ஜனநாயக கட்சி, தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான கட்சியாக திகழ்வதாக கூறினார். மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில், மனிதநேய ஜனநாயக கட்சி எப்போதும் குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சசிகலா, தினகரன் தொடர்புடைய வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிமுன் அன்சாரி, அதிமுக கட்சியில் நிரந்தர தலைவரே உருவாக கூடாது என்பதற்காக வருமான வரிசோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். 

யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம். சசிகலா உறவினர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருவது அரசியல் உள்நோக்கம் என்றும் அவர் கூறினார். சசிகலா உறவினர்களுக்கு பயத்தை உருவாக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டினார்.