கோவில் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு அனுமதிக்க கூடாது... தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி, அதுகுறித்த அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்துசமய அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் இந்துசமய அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு 1965ஆம் ஆண்டு மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மீன்வளத்துறை மூலம் மீன் அங்காடி அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், ஆர்டிஓ அலுவலகம் அமைக்க கொடுக்கப்பட்டது. அறநிலையத்துறை இடங்களை கோவில் பயன்பாட்டிற்கு தவிர மற்றவற்றிற்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வழ்க்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த இரு கோவில்கள் உள்ளிட்ட பல கோவில் நிலங்களின் மீதான வழக்குகளில் நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் வழக்கு தொடர்புடைய அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழ்க அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அறநிலையத்துறை கோவில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கோவில்களின் நிலங்களை கோவில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி, அதுகுறித்த அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்குகளை 6 மாதத்திற்கு பிறகு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.