நிதிஷ்குமார் கட்சி போல அதிமுக பலவீனமடையும்... சாபம் விட்ட தமிமுன் அன்சாரி..!
பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சி இன்று பலவீனமாகிவிட்டது. அதைபோல் அதிமுகவும் ஆகக்கூடும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அதிமுக தொண்டர்கள்தான் கவலைப்பட வேண்டும். நாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. தமிழக மக்களின் மனநிலைக்கு எதிராக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தங்கள் கொள்கைப் பங்காளியாக திகழ்ந்த சிவசேனாவுக்கே மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இடையூறு செய்தவர்கள் பாஜகவினர் என்பதை அதிமுக நினைவில் கொள்ள வேண்டும்.
அதேபோல பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சி இன்று பலவீனமாகிவிட்டது. அதைபோல் அதிமுகவும் ஆகக்கூடும். சில மாதங்களுக்கு முன்பு வரை கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பாஜக முழங்கிவந்தது. ஆனால், இப்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.” என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.