இருளில் மூழ்கப் போகும் தமிழகம் !! ஏன் தெரியுமா ? டி.டி.வி. வெளியிட்ட பகீர் தகவல் !!
தமிழக ஆட்சியாளர்கள் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை முன்கூட்டியே ஸ்டாக் வைக்காமல் விட்டதாலும், காற்றாலை உரிமையாளர்களிடம் மின்சாரம் வாங்க கமிஷன் கேட்டதாலும் அடுத்த சில நாட்களில் தமிழகம் மின்வெட்டால் இருளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு முழுவதும் பல மணி நேரங்கள் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களை வெகுவாக பாதிப் படைய செய்திருக்கிறது.
இதற்கு பராமரிப்பு பணிகளே காரணம் என அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்தாலும், இது திட்டமிடப்பட்ட ஆனால், வெளிப்படையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பதே உண்மை.
இந்த பிரச்சினை தற்போது பூதாகரமாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய நிலக்கரி கையிருப்பானது மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும், தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்காவிட்டால் சில அனல் மின் நிலையங்களை மூடும் சூழல் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைக்கு யார் காரணம்?.
ஜெயலலிதா ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், தற்போதைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையின் காரணத்தால், தனது தினசரி தேவையைவிட 2,500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையின்மேல் அமைச்சருக்கு இருக்கும் அக்கறையை, மின்துறையின் மீதும் சிறிது கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அசாதாரணமான சூழலும், மத்திய அரசிடம் தமிழகம் கையேந்தும் நிலையும் ஏற்பட்டிருக்காமல் தவிர்த்திருக்கலாம் என தினகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த மாத இறுதி வரை காற்றலை உரிமையாளகளிடம் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் .அதற்குள் நிலக்கரியை ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம். ஆனால் காற்றாலை உரிமையாளகளிடம் தமிழக அமைச்சர்கள் கமிஷன் கேட்டு தொந்தரவு செய்வதால் அவர்கள் மின்சாரம் சப்ளை செய்வதை நிறுத்தி விட்டார்கள் என்றும் பகீர் தகவலை வெளியிட்டார்.