Asianet News TamilAsianet News Tamil

மெஜாரிட்டி இருந்தா..வம்புக்கு இழுத்த ஆளுநர்.. ‘லா பாயிண்ட்டை’ பிடித்த ஸ்டாலின் - வேற பக்கம் திரும்புதே.!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் தற்போது உச்சத்துக்கு சென்றுள்ளது.

Tamilnadu goveror rn ravi vs cm mk stalin Conflict
Author
First Published Apr 7, 2023, 5:19 PM IST

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என் ரவி வியாழக்கிழமை இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் எண்ணித் துணிக என்று நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது பேசிய பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்

அப்போது ஆளுநரின் பணி குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரிவாக பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ராஜ் பவன் தரப்பில் ஆளுநரின் முழுமையான பேச்சு வெளியிடப்பட்டுள்ளது. அது மேலும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அதில், “ஆளுநரின் உச்சப்பட்ச பொறுப்பே அரசியலைமைப்பை பாதுகாப்பது. மாநிலமோ, மத்திய அரசோ இரண்டு அமைப்புகளுமே அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். 

அரசியலமைப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகள் குறித்த சட்டங்கள், மத்திய அரசின் அதிகாரம் என்ன, மாநில அரசு என்னென்ன சட்டங்கள் இயற்றலாம், ஒத்திசைவு பட்டியலில் உள்ள விஷயத்தில் மத்திய அரசு சட்டமியற்றலாம், மத்திய அரசு சட்டம் இயற்றியிருக்காவிட்டாலும்கூட மாநில அரசு சட்டமியற்றலாம்.

Tamilnadu goveror rn ravi vs cm mk stalin Conflict 

மத்திய அரசு Vs மாநில அரசு

ஆனால் அது மத்திய அரசின் சட்டத்திற்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் போன்றவை தெளிவாக உள்ளன. சட்டமன்றத்தில் ஒரு கட்சிக்கு முழு மெஜாரிட்டி இருக்கலாம். அதை வைத்து அதில் எந்த மசோதவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதை சட்டம் ஆக்கும் இடத்தில் தான் மாநில ஆளுநரின் பங்கு வருகிறது. ஆளுநரின் பணி என்ன? அந்த இயற்றப்பட்ட சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை தாண்டி போகாமல் உள்ளதா என்பதை கண்காணிப்பது ஆகும். 

அது எல்லை தாண்டி இருந்தால் ஆளுநரின் பொறுப்பு அந்த இடத்தில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது ஆகும். மாநில சட்டமன்றம், மாநில சட்ட மேலவை போன்றவை குறித்து குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பில், மாநில சட்டமன்றம் என்றாலே அதில் ஆளுநரும் அங்கம்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 200-இன்படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அது சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். 

ஒப்புதல் கிடையாது

இரண்டாவது, சரியான மசோதா இல்லை என்றால் அந்த மசோதாவை நிறுத்தி வைப்பது. நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம். இதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. நேரடியாக நிராகரிப்பதாக இல்லாமல் நிறுத்தி வைப்பது என்று அது அழைக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பாக, மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர் எடுக்கலாம். அதற்கு காரணம் மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா தாக்கல் செய்யும் பட்சத்தில் அது குறித்த தமது முடிவை எடுக்காமல் அதை இறுதி செய்வது குடியரசு தலைவர் என்பதால் மசோதாவை அவரது பார்வைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கிறார். 

குடியரசு தலைவர் அத்தகைய மசோதா மீது முடிவெடுக்க இரண்டு வித வாய்ப்புகளை பயன்படுத்துவார். ஒன்று மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் அல்லது அதை நிறுத்தி வைப்பார். ஒரு ஆளுநரால் இரண்டுவித சந்தர்ப்பங்களில் மசோதாவை நிறுத்தி வைக்க முடியாது. ஒன்று பண மசோதாவை அவரால் நிறுத்தி வைக்க முடியாது. இரண்டாவது ஒரு மசோதாவின் மீது ஆளுநருக்கு சந்தேகம் வந்து அதன் மீது விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பினால், அதை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநரால் மறுக்க முடியாது.

அரசியல் ரீதியாக மத்தியில் ஒரு கட்சி, மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் அரசியல் ரீதியாக செயல்படுகிறார் என்கிற பார்வை இருக்கும், ஆனால் அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசு தலைவர்தான். ஆளுநர் தனக்கு கொடுத்துள்ள கடமையை ஆற்றும்போது எந்த குழப்பமும் வராது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu goveror rn ravi vs cm mk stalin Conflict

இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!

முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து அறிக்கை வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல், சமூகக் கருத்துகளைப் பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஆளுநர் ஆர். என். ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். 

தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசரச் சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தனது கடமைகளில் இருந்து தப்பித்தும், நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. 

ஆன்லைன் ரம்மி தடை

இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமல்ல, செயல்படாத முடக்குவாதச் செயலாகவே அமைந்துள்ளது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், ஏதாவது ஒப்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனது கடமை முடிந்ததாக இருக்கிறார் ஆளுநர். உதாரணமாக, எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் என்பது மிகமிக அவசர, அவசிய நோக்கத்தோடு இயற்றப்பட்டது ஆகும்.

முதலில் ஏதோ உப்புச்சப்பற்ற கேள்வியைக் கேட்டார். பின்னர், 'இந்தச் சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை' என்றார். 'மாநில அரசுக்கே உரிமை உண்டு' என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்னபிறகும் இங்கிருக்கும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. ஏனெனில், ஏற்க மனமில்லை. இத்தனை உயிர்கள் பலியான பிறகும் கரையாததாக ஆளுநரின் மனம் இருப்பது அதிர்ச்சியையே தருகிறது. சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது. 

Tamilnadu goveror rn ravi vs cm mk stalin Conflict

கிடப்பில் மசோதாக்கள்

ஆனால், 17-10-2022 அன்று ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டு, சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைத் தலைவரால் பண மசோதா என்று 20-10-2022 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை, அவர் 6-3-2023 அன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன். இந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. 'கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். 

வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்' என்று பேசி இருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும். "Shamsher Singh v. State of Punjab" (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government. " என்று சொன்னது. அதாவது, மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன்னார்கள். 

ஆளுநர் ஆர்.என் ரவி

அதனை மறந்துவிட்டு, 'தி கிரேட் டிக்டேட்டராக' தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதா தவிர, பிற வகை மசோதாக்களை ஆளுநர், அரசுக்குத் திருப்பி அனுப்பலாம். சட்டமன்றம், மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதனை ஆளுநர் நிராகரிக்க முடியாது. எனவே, ஆளுநர் கேட்ட விளக்கங்களைக் கொடுத்து, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும் ஆகாது. சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதனை நமது மாநிலத்தின் நிருவாகத்தினை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது.

எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணம் ஆகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் அவர்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள் பேசி வருவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை உணர்ந்து, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..பல் பிடுங்கிய விவகாரம்: விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் - தமிழக அரசின் முடிவுக்கு என்ன காரணம்?

Follow Us:
Download App:
  • android
  • ios