'திருவொற்றியூர் மக்களுக்கு பேரிழப்பு'..! திமுக எம்.எல்.ஏ மறைவுக்கு ஆளுநர் இரங்கல்..!
கே.பி.பி.சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளுநர் தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
திருவொற்றியூர் தொகுதி திமுக எம் எல் ஏ வாக இருந்து வந்தவர் கே.கே.பி.சாமி. திமுகவின் மாநில மீனவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சாமி 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த சாமி, 2016ல் மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கே.வி.கே குப்பத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். கே.பி.பி. சாமி காலமான செய்தி அறிந்ததும் ஏராளமான திமுகவினர் காலையில் இருந்து குவிந்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் சாமியின் உடலுக்கு திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு உட்பட ஏராளமான திமுக முன்னணியினர் வந்து சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில் திமுக எம்.எல்.ஏ மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வரிலால் ப்ரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். கே.பி.பி.சாமியின் மறைவு திருவொற்றியூர் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளுநர் தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.