tamilnadu government answer about memorials in marina

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை மெரினாவிலிருந்து அகற்ற முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் சென்னை மெரினாவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 18 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்லது.

இதற்கிடையே அந்த சமாதிகளை மெரினாவிலிருந்து இடம் மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன் மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி, கடற்பரப்பிலிருந்து 500 மீட்டர் இடைவெளிக்குள் எந்தவித கட்டுமானங்களும் இருக்கக்கூடாது என்பது விதி. எனவே மெரினாவில் நினைவிடங்கள் அமைக்கப்பட்டிருப்பது சட்டத்தை மீறிய செயல். தேசப் பிதாவான காந்திக்கு கிண்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை மாற்ற வேண்டும் என டிராபிக் ராமசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், 2 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த விளக்கத்தில், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை. சாலையை ஒட்டியே நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை மெரினாவில் இருந்து மாற்ற முடியாது என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.