கமலை திட்டுவதை விட பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்... - அமைச்சர்களுக்கு திருநாவுக்கரசர் அறிவுரை
நடிகர் கமலுடன் மோதி சண்டை போட்டு, பேட்டி அளிப்பதை விட்டுவிட்டு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்கான பணிகளை செய்ய அமைச்சர்கள் முன் வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
நடிகர் சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
டெங்கு காய்ச்சல் தற்போது, மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. இதனால், ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் கமல், தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்தை மட்டும் அமைச்சர்கள் பார்த்து, டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, அவருடன் மோதி எதிர் தரப்பில், பேட்டி அளிக்க வேண்டாம்.
டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கமலை திட்டுவதைவிட, அவர் சொல்லும் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றார்.