tamilnadu bjp leaders do not know modi strategy

தமிழக அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் வியூகங்கள் என்ன என்பது தெரியாமல் தமிழக பாஜக தலைவர்கள் தவித்துவருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் நடந்துவரும் மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் பாஜக தான் காரணம் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நிகழ்ந்த மாற்றங்கள்:

சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியது, எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தும் சசிகலாவை பதவியேற்க அழைக்காமல் ஆளுநர் தாமதம் செய்தது, அமைச்சர்கள், அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனைகள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, தினகரன் கைது, சசிகலா பக்கம் இருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் திடீரென அவருக்கு எதிராக திரும்பியது, பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பு என அனைத்தின் பின்னணியிலும் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இருப்பதாக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது அடுத்தகட்ட பிரச்னை. ஆனால், இவ்விவகாரங்களில் மோடியின் பார்வையும் வியூகமும் என்னவென்றே தெரியாமல், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஒருமித்த குரலில் பதிலளிக்க முடியாமல் தமிழக பாஜக தலைவர்கள் தவித்து வருகின்றனர்.

மோடியின் செயலைக் கண்டு அதிர்ந்த தமிழக பாஜக தலைவர்கள்:

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி சென்னை வந்த மோடி, திடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் அந்த சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டதாம். இருந்தும்கூட தமிழக பாஜக தலைவர்களிடம் தெரிவிக்காமல், முந்தைய நாள் இரவுதான் கருணாநிதியை சந்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் தெரிந்த மோடி:

மேலும் தினத்தந்தி பவள விழாவில் பேசிய மோடி, மூத்த பத்திரிகையாளர் மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இதுவும் தமிழக பாஜக தலைவர்கள் எதிர்பார்த்திராதது. இவற்றையெல்லாம் ஆராய்ந்தால், சென்னை வந்த மோடி தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்துகொண்டு முழு தயாரிப்புடனேயே வந்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இவைகுறித்து தமிழக பாஜக தலைவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக தமிழக பாஜக நிர்வாகி ஒருவர், மோடியின் சென்னை வருகை ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும், கருணாநிதியை சந்திப்பது முதல்நாள் இரவுதான் தெரிய வந்தது. தமிழக நிலவரங்களை உளவுத் துறை மூலமும், சென்னையில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் மூலமும் அவர் தெரிந்து கொண்டுள்ளார். பத்திரிகையாளர் மோகன் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தது எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

எதற்காக இந்த ரெய்டு?

கருணாநிதி - மோடி சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் சசிகலா குடும்பத்தினரின் வீடு, நிறுவனங்கள், பண்ணை இல்லங்கள் என 187 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் ஒரு குடும்பத்தினரை குறி வைத்து இத்தனை இடங்களில் சோதனை நடைபெறுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. எனவே, இதற்கு குறைந்தது 3 மாதங்களாவது திட்டமிட்டிருக்க வேண்டும்.

எதற்காக இந்த அதிரடி சோதனைகள்? இதனால் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்குமா? மோடியும் அமித்ஷாவும் என்ன நினைக்கிறார்கள்? அமித்ஷாவின் தமிழக வருகை இரு முறை ஏன் தள்ளிவைக்கப்பட்டது? என தமிழக பாஜக தலைவர்களுக்கு பல கேள்விகள் உள்ளன. 

மோடி மற்றும் அமித் ஷாவின் வியூகங்கள் தெரியாமல், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஒருமித்த குரலில் பதிலளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.