"காங்கிரஸ் இல்லாத இந்தியா விரைவில் உருவாகுமாம்" - சொல்கிறார் தமிழிசை!
காங்கிரஸ் இல்லா பாரதம் விரைவில் உருவாகும் என்றும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும், பாஜகவில் வந்து சேருவார்கள் என்றும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதோடு நாடு முழுவதும் பல மாநிலங்களில் அக்கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜகவினர் மிரட்டியும், விலை கொடுத்து வாங்கியும் வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு உதாரணமாக குஜராத்தில் ஒரே நாளில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, காங்கிரஸ் இல்லா பாரதம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும், பாஜகவில் வந்து சேருவார்கள் என்றும் தமிழிசை அதிரடியாக தெரிவித்தார்.