tamilisai pressmeet about rk nagar election

உத்தரபிரதேசத்தில் நடந்ததுபோலவே, ஆர்கே நகர் தொகுதியிலும் பாஜக மாபெரும் வெற்றி பெறும் என தமிழிசை கூறினார்.

மதுரையில் பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் பல திட்டங்களால், மத்திய அரசின் சாதனைகள் அதிகரித்து கொண்டே போகிறது. இதன் எதிரொலியாக உத்தரபிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியை கண்டது. மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசுகள் பின்பற்றுகின்றன.

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான நிதி உதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.6000 மத்திய அரசு அளிக்கிறது. ஆனால், இதனை தமிழக அரசு இருட்டடிப்பு செய்துள்ளது.

ஆர்.கே.நகரில் அதிமுகவின் ஒரு அணியில் தினகரன் போட்டியிடுவதால் குடும்ப ஆட்சி உறுதியாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக, வலைவீச தொடங்கியுள்ளது. இந்த வலை அறுந்துவிடும்.

ஆனால், அதே ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக, உத்தர பிரதேசத்தில் பெற்ற வெற்றியைபோல, மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.