ப.சிதம்பரத்தின் அரெஸ்ட் தமிழகத்துக்கே தலைகுனிவு என பேசியிருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ள கார்த்தி சிதம்பரம், அவருக்கு சட்டமும் தெரியாது… அரசியலும் தெரியாது என காட்டமாகப் பேசினார். 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே தமிழகத்துக்கு தலைக்குனிவு என்றும் சட்டம் படித்த ப. சிதம்பரம் ஒரு சம்மன் வருகிறது அதை எப்படி அணுக வேண்டும் என்பது கூடவா தெரியாது ? என கேட்டிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட கார்த்தி சிதம்பரம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, இந்த கைது நடவடிக்கையானது மேல்மட்டத்தினருக்கு வளைந்து கொடுக்கும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பழிவாங்கும் மற்றும் கீழ்த்தர செயல் என குறிப்பிட்டார்.

அரசியல் பழிவாங்கும் செயலாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எந்த அவசியமும் கிடையாது. காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரின் தோற்றத்தினை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

இந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. அரசியல் ரீதியாக மற்றும் சட்டப்பூர்வ முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, சிதம்பரத்தின் கைது தமிழகத்துக்கு தலைகுனிவு என கூறியதற்கு பதிலடி கொடுத்த கார்த்தி சிதம்பரம், அவருக்கு சட்டமும் தெரியாது… அரசியலும் தெரியாது என காட்டமாகப் பேசினார்.