ஸ்டெர்லைட் ஆக்ஸிஜனில் தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை... உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்...!
ஸ்டெர்ட்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது தொடர்பாக நேற்று முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து கட்சியினரும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என ஒப்புதல் வழங்கின. இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு 5 தீர்மானங்களை நிறைவேற்றியது.
இந்நிலையில் ஸ்டெர்ட்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது முதலில் வாதிட்ட தமிழக அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தியை காரணமாக வைத்துக் கொண்டு ஆலையில் வேறு எந்த பிரிவையும் இயக்கக் கூடாது என வாதிட்டது. அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலை தயாரிக்கும் மொத்த ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் தான் வழங்க வேண்டும், தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்களே பிரித்தளிப்போம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது” என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த இக்காட்டான சூழ்நிலையில் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு அளவு தேவைப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் தான் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட், “தமிழக அரசுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவையிருந்தால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து ஆக்ஸிஜன் தேவை என கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.