டோன்ட் ஒர்ரி….. தமிழ்நாட்டுக்குள்ள அது நுழையவே முடியாது….நுழையவும் விட மாட்டோம் !!
‘நிஃபா’ வைரஸ் நோய் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பரவவில்லை. நோய் பரவாமல் இருப்பதற்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ‘நிஃபா’ வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை. எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். நிஃபா வைரஸ் 1998-99ம் ஆண்டுகளில் பன்றிகளில் உருவாகி அதன்பிறகு மற்ற விலங்குகளுக்கு வந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோயாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
அது கேரளாவில் பரவத் தொடங்கியதும் அங்குள்ள சுகாதாரத் துறையுடன் தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம்.அவர்கள் அதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறினர். இது பரவக்கூடிய நோய் ஆகும். இந்த வைரஸ் கேரளாவில் இருந்து தமிழகம் பரவக் கூடிய வாய்ப்புகள் இல்லை என குறிப்பிட்டார்.
இது கேரளாவில் புதிதாக பரவுவதால் அதன் விவரங்களை வாங்கி அனைத்து பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர்களிடம் ஆய்வுக்காக கொடுத்துள் ளோம். நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.இது கால்நடையில் இருந்து பரவக் கூடிய நோயாக இருப்பதால் கால்நடைத் துறையுடனும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகறோம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது வவ்வால்களில் இருந்து பரவும் என்று சொல்வதால் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விலங்குகளுக்கு ஏற்படும் 70 விழுக்காடு நோய்கள் மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. அதில் இதுவும் ஒன்று.நோய் பரவாமல் தடுக்க மனிதர்களின் இருப்பிடமும், பன்றிகளின் இருப்பிடமும் ஒன்றாக இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு காய்ச்சல் என்றால் சுகாதாரத் துறையின் கண்காணிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.தற்போது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கால்நடைகள் வளர்க்கப் படும் இடங்களில் கூடுதலாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.