வெளிநாட்டு தமிழர்களை மீட்டு கொண்டுவர சிறப்பு இணையதளம்.. தமிழக அரசின் தரமான நடவடிக்கை
வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தமிழகத்திற்கு திரும்ப விரும்பினால் விண்ணப்பிப்பதற்காக சிறப்பு இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
கொரோனாவை தடுக்கும் விதமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலமாக சொந்த நாட்டு மக்களுக்கு கொரோனா தொற்றிவிடக்கூடாது என்பதற்காக விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதனால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், பணி நிமித்தமாக வெளிநாடு சென்றவர்கள், சுற்றுலா பயணிகளாக வெளிநாடு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். அவர்களை பிரிந்து குடும்பத்தினரும் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், அப்படி வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழகத்திற்கு மீட்டு கொண்டுவர தமிழக அரசு தீர்மானித்துள்ளது. எனவே வெளிநாட்டில் சிக்கி தவிக்கும், தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் தமிழர்கள், விண்ணப்பிப்பதற்காக ஒரு இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வர விரும்பும் தமிழர்கள், nonresidenttamil.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தில் வெளிநாட்டு தமிழர்கள் பதிவு செய்வதன் மூலம், அவர்களது எண்ணிக்கையினை அறிந்துகொண்டு தமிழகத்திற்க்கு திரும்புகிறவர்களுக்கான தனிமைப்படுத்துதல் வசதிகளை ஏற்படுத்திடவும் அவர்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்காக இந்த இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.