ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்.. முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலு டீ கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தையடுத்து, மாநில அரசுகள் சில தளர்வுகளை செய்துள்ளன.
அதனடிப்படையில், ஏற்கனவே தமிழக அரசு, ஊரடங்கு தளர்வு குறித்த விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்தது. இந்நிலையில், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்(நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர) டீ கடைகளை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மளிகைக்கடைகள், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்றும், சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம் என்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.