“உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. அதனால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு போராட்டத்துக்கு பொருந்தாது. எனவே நாளை நடைபெறும் போராட்டம் தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாமல் நடைபெறும்” என்று  கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாலாஜா சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் நாளை (18-02-20) சட்டப்பேரவைற முற்றுகை போராட்டத்தை அறிவித்தன. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், “தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னையில் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கை, சட்டம் ஒழுங்கை பாதிக்கும். எனவே போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இந்த மனுவை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்ய நாராயணனன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இதனையடுத்து, உத்தரவில், “அனுமதியளிக்கப்படாத போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதி கிடையாது” என நீதிமன்றம் கூறியது. மேலும் வழக்கை மார்ச் 11க்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை போராட்டம் நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் திட்டமிட்டபடி தமிழக சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.