“நீங்க ரெண்டு பேரும் போயி நோட்டா கூட போட்டி போடுங்க...” தில்லா தமாஸ் பண்ணும் தம்பிதுரை...
பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் நோட்டாவுடன்தான் போட்டியிட முடியும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை நக்கலடித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிகவினரால் எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட்டு வருகிறது, விழாவையொட்டி கரூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பிரமாண்டமாக தொடங்கிய இந்த விழா ஆட்டம், பாட்டத்துடன் கூடிய பொதுக்கூட்டமாக இது அமைந்தது. இதில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கலந்து கொண்டு கலகலப்பாக பேசினார்.
தம்பித்துரை பேசுகையில், எம்ஜிஆர் நடிப்பின் மூலம் கிடைத்த புகழை மட்டும் வைத்து அரசியலுக்கு வரவில்லை. 30 ஆண்டு பொது வாழ்க்கைக்குப் பின்னர்தான் அரசியலுக்கு வந்தார். ஆனால், இன்று சில நடிகர்கள் எடுத்த எடுப்பிலேயே முதல்வராக வர நினைக்கின்றனர். அவர்கள் நினைப்பது நடக்கவே நடக்காது.
தமிழகத்தில் திராவிட இயக்கத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக தேசியக் கட்சிகளால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்களால் முடிந்ததெல்லாம் நோட்டாவுடன் போட்டியிட மட்டுமே முடியும் என்றார் தம்பித்துரை.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நோட்டாவை விட மிகக் குறைந்த வாக்குகளை பாஜக பெற்று கேலிக்கூத்தானதை அனைவரும் அறிவோம். இதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வரும் நிலையில், நேற்று இதை சுட்டிக்காட்டி பேசி கலாய்த்துள்ளார்.