தீபாவோடு டி.ராஜேந்தர் கூட்டணி... கொஞ்சம் சீரியஸ் ஆகாம படிங்க மக்கா...!
தீபா அம்மா பேரவையோடு டி. ராஜேந்தர் கூட்டணி அமைக்கப்போகிறார் என கொளுத்திப் போட்டிருக்கிறார் அவருடைய மகன் டி.ஆர். குறளரசன்.
நடிகர் அஜீத் குமாரை அரசியலுக்கு அழைப்பு விடுத்து தன் கைப்பட எழுதிய கடிதத்தை இயக்குநர் சுசீந்திரன் போட்ட ட்விட்டர் பதிவு சினிமா வட்டாரத்திலும் ட்விட்டரிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுசீந்திரனின் கடிதத்தை தன் முக நூல் பக்கத்தில் பதிந்துள்ள இயக்குநரும் லட்சிய திமுக நிறுவன தலைவரின் மகனுமான குறளரசன், “இவரு வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டுருக்காரு. எங்க அப்பாதான்யா அடுத்த முதல்வர்” என்று கமெண்ட்டும் கொடுத்திருக்கிறார்.
அவரது பதிவை முக நூலில் பலரும் காமெடியாக கலாய்த்துவருகிறார்கள். “உங்க சின்னத்தை கூகுளில் தேடினாலும் கிடைக்கலையே” என்று பிரேம் தனுஷ் என்பவர் எழுப்பிய கேள்விக்கு, “எங்க வீட்ல இருக்குயா என் சிப்ஸு. தீச்சட்டி சின்னம்” என்று கலாய்த்திருக்கிறார் குறளரசன்.
நவாஷ் பின் மீரான் என்பவர், “காமெடி பண்ணாத ப்ரோ” என்று போட்ட கமெண்டுக்கு, “உணமை சில நேரங்களில் அற்ப நகைச்சுவையாகத் தோன்றும். தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும்” என்று சீரியஸாகவே பதில் கூறியிருக்கிறார் குறள்.
“இது உண்மையாப்பா” என்று சிவசந்திரன் என்பவர் கேட்ட கேள்விக்கு, “ஆமாம் ஸார்.. தீபா அம்மா பேரவையோடு கூட்டணி சேர்கிறோம்” என்று இன்னும் படு சீரியஸாக தெரிவித்திருக்கிறார் குறள்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று ஏற்கனவே சொல்லியிருந்த டி.ராஜேந்தர், இன்றுதான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார்.
இந்நிலையில் அவருடைய மகன் குறளரசன், தீபாவோடு கூட்டணி என்று கொளுத்திப் போட்டிருக்கிறார். ஆனால், இதை உண்மையா பொய்யா என்று தெரியாத அளவுக்கு அவர் போட்டிருக்கும் கமெண்டுகள் பார்ப்பவர்களை தலை சுற்ற வைக்கின்றன. இருந்தாலும் தன் அப்பாவையே கலாய்க்க குறளரசனுக்கு தகிரியம் ஜாஸ்திதான்.
பி.கு: அண்மையில் இஸ்லாம் மதத்துக்கு மாறியதால் குறளரசன் என்ற தனது பெயரை குரான் அரசன் என்று மாற்றியிருக்கிறார்.