சூர்யா.. அன்புமணி அண்ணனிடம் வருத்தம் தெரிவித்தால் குறைந்துவிடுவியா..? கலந்து அடிக்கும் களஞ்சியம்.
எனவே நடிகர் சூர்யா இந்த விவகாரத்தில் அன்புமணி அண்ணனிடம் ஒரு வருத்தம் தெரிவிக்கலாம், இதன்மூலம் இந்த பிரச்சனை முடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் சூர்யா பிடிவாதமாக இருக்கிறார்.
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவும் அன்புமணியும் அமந்து பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வரவேண்டும் என இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். மேலும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசிடன் சூர்யா வருத்தம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். களஞ்சியத்தின் இந்த கருத்து சூர்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கும் பாமகவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் சூர்யாவுக்கும் ஆதரவாகவும் சிலர் பாமகவுக்கும் ஆதரவாகவும் கருத்து கூறி வருகின்றனர். வன்னிய மக்கள் மத்தியில் பாமகவுக்கு செல்வாக்கு குறைந்து விட்டதால் ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்து இழந்த செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே பாமக திட்டமிட்டு நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுக்கிறது என பலரும் பாமகவை குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இதுவரை யாருமே செய்திராத அளவுக்கு பழங்குடியின சமூக மக்களின் அவல நிலையை மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ள ஜெய் பீம் இத்திரைப்படத்தில், வன்னியர்களின் அடையாளச் சின்னமாக கலச கம்பத்தையும், ஜே குருவின் பெயரையும் ஏன் வைக்க வேண்டும் என மற்றொரு சாரார் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள், திரைப்பட இயக்குனர்கள், கலைஞர்கள் இதுகுறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் முரளி தேவயானி ஆகியோர் நடித்த பூமணி திரைப்படத்தை இயக்கிவரும், சிறந்த கதாசிரியர்கான தமிழக அரசு திரைப்பட விருது பெற்றவரும், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருபவருமான களஞ்சியம் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், அதில்,
ஜெய்பீம் திரைப்படம் என்பது மிகச்சிறந்த திரைப்படம், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அந்த படம் மொழி இனம் கடந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் சிறப்புமிக்க இப்படத்தில் தேவையில்லா ஒரு காட்சியை வைத்து இத்திரைப்படத்தின் இயக்குனர் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். அந்த கதைக் களத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வன்னியர்களின் அக்கினிச்சட்டியையும், ஜெ குருவின் பெயரையும் அவர் வைத்திருப்பது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் மீதான அவருக்குள்ள வன்மத்தை காட்டுகிறது. சூர்யாவும் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்து வருகிறார். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணி மாநில தலைவருமான அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரத்தை பொதுவெளிக்கு கொண்டுவந்திருக்க தேவையில்லை, இதை மிக எளிதாக பேசி முடித்து இருக்கலாம். மொத்தத்தில் இந்த விவகாரத்தில் ஒரு சமூகத்தை காயப்படுத்தும் வகையில் அந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது எனவே நடிகர் சூர்யா இந்த விவகாரத்தில் அன்புமணி அண்ணனிடம் ஒரு வருத்தம் தெரிவிக்கலாம், இதன்மூலம் இந்த பிரச்சனை முடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் சூர்யா பிடிவாதமாக இருக்கிறார். வருத்தம் தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை,
இப்போது பாமகவினர் சூர்யாவை தாக்குவோம், அடிப்போம் என்று பேசும் அளவிற்கு இந்த பிரச்சனை சென்றுள்ளது, இந்த அவமானம் சூர்யாவுக்கு தேவைதானா.? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அதே வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மோகன்ஜி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை இழிவு படுத்தும் வகையில் திரௌபதி, ருத்தரதாண்டவம் என்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதையும் அன்புமணி அவர்கள் கண்டித்திருக்க வேண்டும், மொத்தத்தில் தமிழ் சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை தேவை எனவே இந்த விவகாரத்தில் சூர்யாவும் அன்புமணி அவர்களும் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.