ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவில் புகார்..? ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக பாய்ந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியை ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசியது கட்சி விரோத நடவடிக்கை என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒற்றை தலைமை யார்?
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி தனி தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டுவர இபிஎஸ் தரப்பு மும்முரமாக உள்ளது. இதற்காக இபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ள தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிடவர்கள் அதற்க்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அதே நேரத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்திற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்வளவு காலம் அனைத்தையும் இழந்து பொறுமையுடன் இருந்ததாகவும் இனி இருக்கப்போவதில்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது, தற்போது வரை இபிஎஸ் அணிக்கு 55க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும் ஓபிஎஸ் தரப்புக்கு 13 மாவட்ட செயலாளர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை ?
இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்யை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகி வருவதாகவும், அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் பழனிசாமி வெளியே போய் நின்றால் 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது என தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியை ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசியது கட்சி விரோத நடவடிக்கை என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் மீது அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் இபிஎஸ் ஆதரவாளர்கள கூறியுள்ளனர். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார மோதல் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
இந்தியாவின் துணைப் பிரதமராக மு.க.ஸ்டாலின் திட்டம்..! திமுக அரசை கலாய்க்கும் அண்ணாமலை