ஒரு வாரத்தில் விடுதலையாக இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என சீமான் கூறியுள்ளார். 

ஒரு வாரத்தில் விடுதலையாக இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என சீமான் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் வெல்லப்போறான் விவசாயி என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சை மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட உள்ள 35 வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.பின்னர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இந்தக் கூட்டம் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இல்லை. நாங்கள் தேர்தல் வேலையை முன்பே தொடங்கிவிட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, சென்னையில் பெரிய அளவில் மாநாடு நடத்தி, மொத்த வேட்பாளர்களையும் அறிவிக்க இருக்கிறோம். 

இதில் சரிசமமாக பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர்.117 பெண்கள்,117 ஆண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர். நாங்கள் காசு கொடுத்து வாக்குக் கேட்பவர்கள் அல்லர். சிறந்த ஆட்சியைக் கொடுப்போம் என மக்களிடம் கூறி, மக்களிடம் வாக்குகளைப் பெறுவோம் என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவர் கூட சுடப்படவில்லை; கொல்லப்படவில்லை என பாஜகவினர் பேசுகின்றனர். என்றாலும், இதை வெளியுறவுத் துறை, ராணுவத் துறைக் கண்டித்து இச்செயல் நடக்கக் கூடாது எனக் கூறியதில்லை. நட்பு நாடு எனச் சொல்லக்கூடிய இலங்கை, பல மீனவர்களைக் கொன்றுள்ளது. இதுவே, வட இந்திய மீனவர்களுக்கு நிகழ்ந்திருந்தால், இதுபோல மத்திய அரசு விடுமா? ஆனால், தமிழன் உயிர் என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா ஒரு முறை கூட மருத்துவ மனைக்குச் செல்லவில்லை. சிறையிலிருந்து வெளியே வரும் நிலையில், திடீரென அவருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் எனக் கூறப்படுவதன் காரணம் என்னவென வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது. எனவே இதில், அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.